இந்தியா முழுவதும் கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வரை மொத்தம் ஒரு கோடி 7 இலட்சத்து 15 ஆயிரத்து 204 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 16-ஆம் திகதி முதல் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள் என 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது.
அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை 13,993 புதிய கோவிட்19 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அத்துடன் நேற்று மேலும் 101 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
புதிய தொற்று நோயாளர்களுடன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,77,387 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,06,78,048 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். தற்போது 1,43,127 பேர் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று உயிரிழந்த 101 பேருடன் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 1,56,212 ஆக உயர்ந்துள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா